International Kallar Peravai

http://kallarperavai.weebly.com/29802990300729962965-299729922994300629933009.html

தமிழ்நாட்டு வரலாறு

Picture
தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், முத்தரையர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை.
சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு  தொடங்கி நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள்  சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன்  மன்னனும்,  பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி  ஆகிய  மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லைமற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.

கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை.
கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும்அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர்என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களை பற்றி மட்டும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்துளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு.

கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த  பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

இக்காலக்கட்டத்தில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிபி9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை.
இராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030 கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன்ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.

இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை  வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின்சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறிஅந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயாமற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில்கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டு.
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர்.  அம்பியை  தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச்  சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக் கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.  தஞ்சை  மற்றும்  மதுரையைச்  சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைபுதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு.
1639 இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியைநிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். புலித்தேவன், வீரபாண்டிய கட்ட பொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகுமுத்துக்கோன்,  மருதநாயகம், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன்,  வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன்
அனந்த பத்மநாபன் நாடார், போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர்.

20 ஆம் நூற்றாண்டு.
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்)(The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்குகேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன.

1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.

1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது.

1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

மறைந்த நகரங்கள்

Picture
மறைந்த நகரங்கள்
பழங்காலத்தில் நமது அன்னைத் தமிழகம், சேர, சோழ, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவுகளாக விளங்கியது. சேர நாட்டை ஆட்சி செய்தவர் சேரர் என்றும், சோழ நாட்டை ஆட்சி செய்தவர் சோழர் என்றும் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவர் பாண்டியர் என்றும் குறிக்கப் பெற்றனர்.

பாண்டிய மன்னர்களின் தலைநகராக மாநகர் மதுரையும், சேர மன்னர்களின் தலைநகராக வஞ்சி மூதூரும், பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் சோழ மன்னர்களின் தலைநகராகவும் சிறப்போடு விளங்கின.

பொதுவாக ஆறு, கடலுடன் கலக்கும் பகுதியைப் புகார் என்பர். காவிரியாறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பெற்றது. பின்னர் இப்புகார் நகரின் பொலிவின் காரணமாகவும் சிறப்பின் காரணமாகவும் பூம்புகார் என்று அழைக்கப்பெற்றது.

பிற்காலத்தில், பூம்புகார் என்னும் பெயர் மாறி, காவிரி புகும்பட்டினம் என்றாகி, நாளடைவில் காவிரிபூம்பட்டினம், காவிரிப்பட்டினம், காவேரிப்பட்டினம் என்று பலவாறாக வழங்கப் பெறலாயிற்று.

காவிரிப் பூம்பட்டினத்துச் சிறப்புக்களைச் சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை நூல்களுள் சில பாடல்களும், பத்துப்பாட்டில் பொருநர் ஆற்றுப்படையும், பட்டினப்பாலையும், ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தெளிவாக விளக்குகின்றன.

காவிரிப்பூம்பட்டினம் முப்பெரும் பிரிவுகளாக விளங்கியது. காவிரிப் பூம்பட்டினத்தில் கடற்கரையோரமாக அமைந்த பகுதி மருவூர்பாக்கம், நகராக அமைந்த பகுதி பட்டினப்பாக்கம். இவ்விரு பாக்கங்களுக்கு இடையே அமைந்த பகுதி நாளங்காடி.

மருவூர்ப்பாக்கத்தில் ஒளிநிலா முற்றங்களும், சிறப்புமிக்க பலவகை அணிகளால் அழகு செய்யப்பட்ட அறைகளும், மான்விழி போலமைந்த சாளரங்களும் கொண்ட மாளிகைகள் பலவாக அமைந்திருந்தன. பெரிய பண்டகசாலைகள் இருந்தன. காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் யவனர் மாளிகைகள் விளங்கின. கடல் வாணிபத்தில் பொருள் குவித்த பிறநாட்டு வணிகர்களும் கடற்கரையோரமாகவே வாழ்ந்தனர். மருவூர்ப் பாக்கத்துத் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்களும் வந்து தங்கின. அலைகளினால் அலைவுற்று நிற்கும் நாவாய்கள் பலவும் அங்கு அழகிய தோற்றத்தை எப்போதும் அளித்தன. சாந்து, மணிப்பொடி, குளிர்மணச் சந்தனம், பல்வகை மலர்கள், செந்தேன், பச்சிலை, கற்பூரம், அகில் முதலியவற்றை விற்பனை செய்யும் வணிகர்கள் நகர வீதிகளில் அங்குமிங்குமாகத் திரிந்தனர். பட்டு நூலாலும், பருத்தி நூலாலும், எலி மயிராலும், பல்வகை ஆடைகள் நெய்யும் தொழில்நுட்பம் வாய்ந்த நெசவாளர்களின் தனி இருக்கைகளும் நகர்த் தெருவில் அமைந்திருந்தன.

மாசறு பொன்னும் முத்தும், பல்வகை மணிகளும், இவ்வளவின என வரையறுத்துச் சொல்ல முடியாத அளவில் குவிந்து கிடக்கும் அகன்ற தெருக்கள் ஒருபுறம்; நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கி, தோரை, இராகி, எள், கொள், பயறு, உழுந்து, அவரை, துவரை, கடலை, மொச்சை, மூங்கில், காராமணி ஆகிய பதினெண்வகைக் கூலப்பொருள்கள் விற்கப்பட்ட தெருக்கள் - அப்ப வாணிகர், கள் விற்போர், மீன் விற்போர், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கற்பூரம், தக்கோலம் ஆகிய ஐவகை மணப்பொருள்களை விற்போரின் வாழ்விடங்கள் கொண்ட தெருக்கள் ஆகியவற்றோடு, கள் விற்கும் மகளிர், மீன் விற்கும் பரதவர், ஆடுகள் விற்போர் ஆகியோர் நிறைந்த புலால் கடைகளும் ஒருபுறம் இருந்தன.

கருமார், தச்சர், ஓவியர், சிற்ப வல்லுநர், தட்டார், தையல் தொழிலாளர், கம்மியர், செம்மார் முதலிய பல்வகைத் தொழிலாளர்களும் நகரின் ஒருபுறத்தே இருந்தனர்.

பிறிதொரு தெருவில், ஏழிசைப் பண்ணும் திறனும் அறிந்து பாடும் பாணர்களும், இசைவாணர்களும் வாழ்ந்தனர்.

அடுத்து பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கத்தில் அரசனுடைய அரண்மனை இருந்தது. சோழன் கரிகாலன் காலத்தில்தான் காவிரிப்பூம்பட்டினம் சிறப்போடு விளங்கியது. அவன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்று இமயச் சிகரத்தில் புலிக்கொடி நாட்டித் திரும்பினான். மீண்டு வரும் வழியில் வச்சிர நாட்டு மன்னன் முத்துப்பந்தரையும், மகத அரசன் பட்டிமண்டபத்தையும், அவந்தி மன்னன் தோரணவாயிலையும் திறையாகவும், பரிசாகவும் தமிழ்வேந்தனுக்கு அளித்தனர்.

முத்துப் பந்தரும், தோரண வாயிலும், பட்டிமண்டபமும் பொன்னும் மணியும் இழைத்த அரிய வேலைப்பாடுகள் வாய்ந்தவை. கரிகாலன் இவற்றையெல்லாம் காவிரிப்பூம்பட்டினத்திற்குக் கொணர்ந்து, கண்கவரும் கொலுமண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த மண்டபம் புலவர் பாடும் சிறப்பைப் பெற்றது. இதற்கு சித்திர மண்டபம் என்று பெயர்.

காவிரிப் பூம்பட்டினம் துறைமுகத்தில் அயல்நாட்டுக் குதிரைகள் வந்து இறங்கின. யவன, சோனக வணிகர்கள் தமிழ்நாட்டுப் பொருள்களை வாங்கிச் செல்லக் கப்பல்களுடன் காத்திருந்தனர். தமிழக மிளகு, அகில், துகில், முத்து, மணி, பவளம் முதலியன பிறநாடுகளுக்கு மிகுதியாக அனுப்பப்பட்டன. இத்துறை முகத்தில் கலங்கரை விளக்கம் பொலிவாக அமைந்திருந்தது.

பட்டினப்பாக்கத்தில் ஐவகை மன்றங்கள் வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம், எனும் பெயர்களில் நிலை பெற்றிருந்தன.

பொருளைக் களவு செய்வோரை வெளிப்படுத்திக் காட்டுவது வெள்ளிடை மன்றம்.

"இலஞ்சி மன்றம்" எனும் பொய்கை மன்றில், கூன், குருடு, ஊமை, செவிடு, தொழுநோயர் ஆகியோர் மூழ்கி வலம் வந்தால் குறை நீங்கி நலம் பெறுவர் எனக் கருதப்பட்டது.

நெடுங்கல் மன்றத்தில் ஒளி வீசும் நெடிய கற்கள் நடப்பட்டிருக்கும். வஞ்சகர்களால் மருந்து வைக்கப்பட்டுப் பித்தம் கொண்டோர் - நஞ்சுண்டு துன்புறுவோர், நச்சவரம் தீண்டப்பட்டோர் ஆகியோரெல்லாம் ஒள்ளிய நெடிய கற்களைச் சுற்றி வந்து நலம் பெறுவர்.

செங்கோல் தவறினாலும், அறங்கூறவையத்தார் நடுவுநிலை பிறழினும், அதனை நாவாற் கூறாமல், கண்குறிப்பில் காட்டும் பாவைப் படிவத்தைக் கொண்டிருந்தது பாவை மன்றம்.

இங்ஙனம் ஐவகை மன்றங்களையும் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் சமணர்கள், பௌத்தர்கள், சைவர்கள், வைணவர்கள் ஆகிய பல்வேறு சமயத்தினரும் வாழ்ந்த ஒருமைப்பாட்டுத் தலமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

பல்வகையாலும் சிறந்து வளர்ந்த பூம்புகார் நகரத்தின் ஒரு பகுதி கடற்கோளால் அழிந்தது. எஞ்சிய நகரம் அரசிருக்கையின் மாற்றத்தாலும் சோழர்கள் குடிப்பகையாலும், மக்களின் ஆர்வமின்மையாலும் பாண்டிய மன்னன் படை எடுப்பாலும் சிதைந்து அழிந்தது. இதனை இங்கு நிகழ்ந்த தொல்பொருள் ஆய்வும் மெய்ப்பிக்கிறது.

மறைந்த நகரங்களை மீண்டும் கண்டறிய வேண்டும் எனும் ஆர்வம் அறிவாராய்ச்சியின் விளைவாகும். மலை நாடுகளில் கடல் கொண்ட நாடுகள் பலவற்றை அகழ்வாராய்ச்சி செய்து தேடிடவும் மீண்டும் அவற்றை உருவாக்கிடவும் பெரிதும் முயன்று வருகின்றனர். பூம்புகார் அழிவை ஆராய கடற்பரப்பில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டுமென்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன் முன்னோடியாக மறைந்த பூம்புகார் மாநகரை மீண்டும் அதே வனப்புடன் ஓரளவேனும் காண வேண்டும், கண்ணகி வாழ்ந்த ஊரில் அக்கற்பரசிக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும், சிலப்பதிகாரக் காட்சிகளைச் சிற்பங்களாக வடித்து, அவற்றை ஒரு மண்டபத்திலே அமைத்து, சிலப்பதிகாரச் செய்தியை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் எனும் ஆர்வத்தின் விளைவாக பூம்புகாரில் இம்மலர்கள் இப்போது எழுந்துள்ளன.

தமிழகம் தரணிக்குத் தந்த இரு மாபெரும் பரிசுகள்.

Picture
தமிழகம் தரணிக்குத் தந்த இரு மாபெரும் பரிசுகள்.
" தோணி மற்றும் கட்டுமரம் -தமிழுலகம் உலகுக்குத் தந்த இரு மாபெரும் பரிசுகள்"
விடிகாலை நேரத்தில் கடற்கரையைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.மெதுவாக வெளுத்துவரும் வானத்தின் பின்னணியில் கண்முன்னே விரியும் காட்சிகள் ஒரு உயிருள்ள ஓவியம் போல மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன.

இந்திய நாட்டின் கடற்கரை 4050 மீனவக் கிராமங்களைக் கொண்டு ஏறத்தாழ 8118 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து விரிந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி
ஒன்றரைக்கோடி இந்திய மீனவர்கள் ஏறத்தாழ இரண்டு லட்சத்து எட்டாயிரம் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையும் ஐம்பத்தையாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளை யும் ஆயிரத்து இருநூற்று ஐம்பது மின் விசைப் படகுகளை யும் நூறு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பழங்காலத்தில் அருகிலிருக்கின்ற தீவுகளுக்குச் சென்று வருவதற்காக மனிதன் சிறு படகுகளைப் பயன்படுத்தினான். அதில் நெடுந்தொலைவு பயணம் செய்யும் எண்ணம் அப்போது அவனிடம் இருக்கவில்லை.

மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்த சிறு படகு ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் தான் இருந்தது.அந்தப் படகுகளை அவர்கள் ஆழமற்ற நீர்நிலை களில் மீன்பிடிக்கவும் பயன்படுத்தினார்கள்.இன்றும் இந்தப் படகுகள் அதன் ஆரம்ப காலத் தோற்றத்திலேயே ஆஸ்திரேலிய மற்றும் பாலினேசியப் பழங்குடிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

காலப் போக்கில் காற்றின் ஆற்றலை அறிந்து கொண்ட மனிதன் காற்றின் போக்கிற்க்கேற்றவாறு நெடுந்தொலைவு பயணம் செய்யும் வகையில் பாய்மரத்தை உருவாக்கினான்.

' தோணி ' என்று தென்னிந்திய மக்களால் அழைக்கப் படுகின்ற ஒருவகைப் படகு இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை,அரேபியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.'

மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலான ' தொல்காப்பிய'த்தில் இந்த வகையான படகுகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன இன்னொரு பண்டைய தமிழ் இலக்கிய நூலான ' சேந்தன் திவாகரம் ' தோணியை நீண்ட கடல் பயணம் மேற்கொள்கின்ற மரக்கலமாக வகைப் படுத்துவதிலிருந்து தோணியின் பழம்பெருமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. .

மேலும் சேந்தன் திவாகரம் கடல்பயணம் செய்கின்ற மரக்கலங்களை வங்கம், பாதை,தோணி ,யானம், தங்கு, மதலை,திமில், பாறு ,சதா மற்றும் போதன்தொல்லை என்று வகைப்படுத்துகிறது.

தோணியின் மற்ற பெயர்களாக பகடு,பஹ்ரி ,அம்பி,ஓடம், திமிலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன

இது தவிர மலையாள மொழியில் வல்லம்,வத்தல்,வஞ்சி என்று படகுகளைக் குறிக்கின்ற சொற்களெல்லாம் பண்டைய தமிழ்ச் சொற்களேயாகும்

சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வரும் இன்னொரு வகையான படகு தமிழ் மொழியில்
' பரிசல் ' என்று அழைக்கப்படுகிறது.

பண்டைய தமிழ் இலக்கிய நூலான ' அகநாநூறின் ' சில செய்யுள்கள் தமிழர்களின் தோணிகள் அளவில் பெரியதாக வும் அதிக அளவில் பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லத் தக்கதாகவும் இருந்ததாகச் சொல்கிறது.

பாரம்பரியமாக வேம்பு, நாவல்,இலுப்பை ஆகிய மரங்கள் நீரில் மூழ்கியிருக்கின்ற தோணியின் அடிப்பாகங்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.தேக்கு மற்றும் வெண் தேக்கு மரங்கள் பக்கவாட்டு மற்றும் மேற்பகுதிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன

சாதரணமாக சிறிய தோணி ஒன்றைக் கட்டுவதற்கு ஒரு மாத காலமும் பெரிய தோணியைக் கட்டிமுடிக்க ஒரு ஆண்டு காலமும் ஆகிறது.தற்காலத்தில் சிறிய தோணியைச்
செய்து முடிக்க ஐம்பதாயிரம் ரூபாயும் பெரிய தோணியைக் கட்ட பத்து லட்சம் ரூபாயும் செலவாகிறது.

'தோ ' [ Dhow ] என்று அழைக்கப்படுகின்ற அரேபிய நாட்டுப் பாரம்பரியக் கப்பல் தோற்றத்திலும் உச்சரிப்பிலும் தமிழ்நாட்டுத் தோணியை ஒத்திருக்கிறது.சாதரணமாக தோணி ஒரு பாய்மரத்தைக் கொண்டது என்றாலும் பல பாய்மரங்கள் கொண்ட தோணிகளும் பயன்பாட்டில் இருந்து வந்தன.'

இந்த வகையிலான தோணிகள் பழங்காலத்தில் இந்தியா,பாகிஸ்தான்,அரேபியா மற்றும் ஆப்பிரிக்கக் கிழக்குக் கடற்கரைகளில் புழங்கி வந்தன.சிறிய அளவிலான தோணிகள் பன்னிரண்டு பணியாளர்களையும் பெரிய தோணிகள் முப்பது பணியாளர்களையும் கொண்டிருந்தன. இவை நீண்ட அடிப்பாகத்தையும் 300 முதல் 500 டன் எடையையும் கொண்டிருந்தன.

ஒரு உடைந்த வெண்கல மணியொன்று 1836ஆம் ஆண்டில் ' வில்லியம் கொலேன்சோ' [William Colenso ] என்ற பாதிரியாரால் நியூசிலாந்து நாட்டின் வடபகுதியில் ' வாங்கரெய் ' [Whangarei ] என்ற  இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.அது மாவோரி பூர்வ குடிகளால் உருளைக்கிழங்கு வேக வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்த மணியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை தமிழ் எழுத்துக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. 'முகையதீன் பக்சின் கப்பலின் மணி' என்று அவை மொழி பெயர்க்கப்பட்டன.அந்த மணி ஐநூறு ஆண்டுகள் பழமையானது.அந்த மணிக்கு வில்லியம் கொலென்சொ ' தமிழ் மணி' என்று பெயரிட்டார்.

சீன நாட்டின் காண்டன் ' [ Conton ] பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில தமிழ்மொழிக் கல்வெட்டுக் குறிப்புகள் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் நீண்ட பயணம் செய்திருப்பதை உணர்த்துகின்றன.

சமீப காலத்தில் இந்திய  நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது வ.உ .சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு வியாபாரக் கப்பல் சேவையைத் துவங்கி 'கப்பலோட்டிய தமிழன்' என்று பெயர் பெற்றார்

தற்காலத்தில் தோணிகள் கண்ணாடி இழைப் பொருட்களால்
தயாரிக்கப்படுகின்றன.சக்தி வாய்ந்த இயந்திரமும் செலுத்துச் சக்கரமும் இணைக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் உலகுக்கு அளித்த மற்றுமொரு மதிப்பிட முடியாத பரிசு 'கட்டுமரம்'.இரண்டு அல்லது மூன்று மரத் துண்டுகளை இணைத்து கயிறால் கட்டப்பட்டதுதான் கட்டுமரம்.இது ஒரு மனிதனை மட்டுமே சுமக்கக் கூடிய அளவுக்கு சிறியது.அதில் இருப்பவரின் கால்கள் கூட பெரும்பாலும் நீரில்தான் இருக்கும்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 'பரவர்கள்' என்ற மீனவ மக்களே பண்டைக்காலத்தில் கட்டுமரங்களைப்  பயன்படுத்தியிருக்கின்றனர்.ஆரம்ப காலங்களில் கட்டுமரங் களைச் செலுத்த துடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. நாளடை வில் நீண்ட தூரம் பயணம் செய்யும் நோக்கத்தோடு பாய்மரங்களும் இணைக்கப்பட்டன.

இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற 'கட்டமரான்' [Cattamaran ]என்ற ஆங்கிலச் சொல் இணைத்துக் கட்டப்பட்ட மரம் என்று பொருள் தருகின்ற கட்டுமரம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்தே வந்தது.தமிழ்நாட்டுக் கட்டுமரங்கள் தம் பழைய அமைப்பிலிருந்து கொஞ்சமும் மாறாமலேயே இருக்கின்றன.

மீனவர்கள் கட்டுமரத்தின் துணையோடு தனி மனிதனாகக் கரையோரக் கடலுக்குள் சென்று மீன் பிடித்துத் திரும்பு கிறார்கள். இணைத்துக் கட்டப்பட்ட அந்த மரத்துண்டுகளை நம்பி பல குடும்பங்கள் கரையில் காத்திருக்கின்றன.

கட்டுமரங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்பாகங்களைக் கொண்டவை.தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான கட்டுமரங்கள் பாலினேசியப் பூர்வகுடி மக்களின் கட்டுமர அமைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் கட்டுமரம் என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கப் படுகின்றன.

பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்ச் சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கடற்படையைக் கொண்டிருந் தார்கள்.அவர்களுடைய பெரும்பான்மையான கப்பல்கள் கட்டுமர செயல்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டிருந்தன.சோழர்களின் சில கப்பல்களின் சிறப்புகளைக் காண்போம்.

'தரணி' -ஆழ்கடல் போர்களில் இந்த வகைக் கப்பல்கள் பயன் படுத்தப்பட்டன

'லோலா '- காவல் பணிகளுக்கும் சிறு அளவிலான தாக்குதல் களுக்கும் இவை பயன்பட்டன.

'வஜ்ரா '- இவை இலகு ரக ஆயுதங்களைத் தாங்கி விரைவான தாக்குதல்களில் ஈடுபட்டன.

'திரிசடை ' -இது மூன்று பாய் மரங்களைக் கொண்டிருந்தது. வேகம் குறைவு என்றாலும் இந்தக் கப்பல் கனரக ஆயுதங் களைத் தாங்கி பல்முனைத் தாக்குதல்களில் பயன்படுத்தப் பட்டது.

ராஜ  ராஜ சோழன் தனது கப்பல்களைக் கட்டும் பணியில் அரேபிய மற்றும்  சீன நாட்டுப் பொறியாளர்களை அமர்த்தியிருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீப்பந்து களை வீசக்கூடிய சீன நாட்டுப் பொறியமைப்பை சோழக் கப்பல்கள் பெற்றிருந்தன.இந்த மாதிரியான சிறப்புகளால் சோழர்கள் இலங்கை, மலேயா, இந்தோனேசியா , கம்போடியா ஆகிய நாடுகளின் மீது கடல்வழி படையெடுப்புகளை நடத்தி கி.பி 984க்கும் 1042க்கும் இடைப்பட்ட காலங்களில் அந்நாடுகளை ஆட்சி செய்தார்கள்.

சிறப்பான கடற்படையைக் கொண்டிருந்த ராஜேந்திர சோழன் கி.பி 1007 ஆம் ஆண்டில் ஸ்ரீவிஜயப் பேரரசு மீது படையெடுத் தான்.எதிரியின் கடற்படையை அழித்தது மட்டுமல்லாமல் ' கெடா ' பகுதியைக் கைப்பற்றி மலேயா தீபகற்பத்தில் சோழ ஆட்சியையும் நிறுவினான்.

பூம்புகார் நகரிலிருந்து பத்தொன்பது கல் தொலைவில் கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள் கி.பி 200- 848க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சோழர்களின் கப்பலைச் சேர்ந்தவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்தச் சிதைவுகளை மாதிரியாகக் கொண்டு அந்தக் கப்பலின் அடிப்பாகத்தைச் செய்து அதை திருநெல்வேலி கடல்சார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

சோழர் காலத்தைச் சேர்ந்த கப்பலின் உருவங்களைக் கொண்ட கற்சிற்பங்கள் கம்போடிய நாட்டு ' அங்கோர்வாட் '
Anghorvat ] கோவிலிலும் இந்தோனேசிய 'போரோபுதுர்' [Poropudur ]
கோவிலிலும் இருக்கின்றன.இவை சோழர்களின் கப்பல் கட்டும் திறனை பறைசாற்றுகின்றன.

இந்தோனேசியாவிலுள்ள பாலித்தீவு இன்றளவிலும் அழியாது வேரூன்றிய தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டிருக் கிறது.எண்பத்தேழு கல் நீளமும் ஐம்பத்தாறு கல் அகலமும் மட்டுமே கொண்ட இத்தீவில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்குள்ளாக தமிழர்களால் கட்டப்பட்ட இரண்டாயிரம் கோவில்கள் உள்ளன.

' யோக்யகர்த்தா ' [ Yogyakarta ] நகரில் அமைந்துள்ள ; பிரம்பனான் கோவில் ' [ Perumpanan ] அங்கே ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களின் கட்டிடக் கலைத்திறனுக்கு ஒரு அழிக்க முடியாத ஆதாரமாகத் திகழ்கிறது.

பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மரக்கலங்கள் எழுநூறு பேர் வரையில் ஏற்றிச் செல்லத் தக்கதாக இருந்தன.தமிழ் மக்கள் கப்பல் கட்டும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததையும் அவர்கள் சிறந்த மாலுமிகளாக இருந்ததையும் இது எடுத்தியம்புகிறது.

சோழர் காலத்து வணிகர்களான  'திசை ஆயிரத்து ஐநிருவர்' இந்த வகைக் கப்பல்களில் தம் பொருட்களை ஏற்றிச் சென்று உலகம் முழுவதும் வணிகம் செய்து வந்தனர்.இன்னுமொரு பழங்கால வணிக அமைப்பினர் ' மணிக்கிராமம் செட்டி'களா வார்கள்.எட்டுத் திசைகளும் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த இவர்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் குறிப்பு களும் உள்ளன.

சாகசப் பயன்கள் புரிந்த 'வலங்கை' மற்றும் இடங்கை'என்று அழைக்கப்பட்ட வணிகர்கள் குதிரைகள், யானைகள், ரத்தினக் கற்கள் ,வாசனைத் திரவியங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வணிகம் செய்ததையும் அறிகிறோம்.

தமிழ் வணிகர்களின் பெருங்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பெர்சிய வளைகுடா மட்டுமின்றி செங்கடல் பகுதிகளிலும் மத்திய தரைக் கடல் மற்றும் எஜியான் கடல்களிலும் வலம் வந்தன.தமிழ் வணிகர்கள் முதலில் பஹ்ரைன் நாட்டில் தங்கி அதன்பிறகு அங்கிருந்து 'மெசபடோமியா' என்றழைக்கப்பட்ட தற்போதைய ஈராக் நாட்டின் பல பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்ததாக சரித்திர ஆசிரியர்கள் விளக்குகின்றனர்.

டைக்ரிஸ்,யூப்ரடீஸ் நதிகளுக்கிடையே அமைக்கப்பட்ட சோழர்களின் குடியிருப்புகள் சோழதேசம் என்று அழைக்கப்பட்டன.காலப்போக்கில் சோழதேசம் என்ற சொல் உச்சரிப்பு மருவி 'சல்தே' [Chaldea ] என்றானது.

இறந்து பதம் செய்யப்பட்ட எகிப்தியர்களின் உடல்களில் [Mummy] இருந்த துணிகளில் இருந்த இந்தியச் சாயமும் [Indian ink]

 'பிர்ஸ் நிம்ருட் ' [Pirs Nimrut ] என்ற இடத்தில் இருந்த 'நெபுகட் நெஸ்ஸா [ Nepukatnezza ] மன்னனின் மாளிகையிலும் 'உர்'  [Ur ] என்ற இடத்தில் இருந்த நிலாக்கடவுள் கோவிலிலும் கண்டெடுக் கப்பட்ட தேக்கு மரத்துண்டுகளும் தென்னிந்தியா விலிருந்தே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இவை களெல்லாம் மேற்கு நாடுகளுடனான தமிழர் வணிகத் தொடர்புகளை விளக்குகின்றன.

பண்டைய பிராஹ்மி தமிழ் எழுத்துகள் பொறித்த சில உடைந்த பானைத் துண்டுகள் 'க்வாசிர் அல் க்வாடிம்'  '[Quseir-al-Qadim ] மற்றும் 'பெரினிகே ' [ Bereneke ] ஆகிய எகிப்திய செங்கடல் துறைமுகங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.இந்த எழுத்துக்கள் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த எழுத்துக்கள் 'உறிப்பானை' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கின்றன.

துவக்க நூற்றாண்டுகளில் செங்கடல் வழியாக தமிழ் நாட்டுக்கும் ரோம் நகருக்கும் இடையே இருந்த வியாபாரத் தொடர்புகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் அழுத்தமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

செங்கடல் பகுதிகளில் தமிழ் மொழியின் வளமைக்கு மற்றுமொரு சான்றும் உள்ளது.'ஆக்ஸிரிங்கஸ் பேப்பிராய் ' [Oxyrhynkas papyri '] என்ற பண்டைய கிரேக்க மொழி நாடக வடிவத்தின் கதாபாத்திரங்கள் ஒரு தென்னிந்திய மொழியில் அநேகமாகத் தமிழ் மொழியில் பேசியதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த உரையாடல்களில் ஏறத்தாழ 1800 கடல் சார்ந்த தமிழ் மொழி வார்த்தைகள் இருந்ததாக தமிழ் மொழி வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

இது தவிர தென் அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற 'மாயன்; பூர்வகுடி மக்களின் முன்னோடிகள் உண்மையில் பண்டைக்காலத்து தமிழ்க் கடலோடிகளே என்ற கருத்தும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது.மாயன் மக்களின் கருத்த நிறமும்,அவர்களுடைய கற்சிற்பங்களில் காணப்படும் தலைப்பாகை அணிந்த மாவுத்தர்களுடன் கூடிய இந்திய யானை உருவங்களும் ,தமிழ்நாட்டின் தாய விளையாட்டை ஒத்திருக்கும் அவர்களின் சித்திரங்களும், தமிழர்களின் கட்டிடக்கலையை ஒத்த அவர்களின் கல் கட்டுமானங்களும் இந்தக் கருத்துக்கு உறுதியான சான்று தருகின்றன

' மார்க்கோ போலோ ' என்ற ஐரோப்பியக் கடலோடி 1292 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தியக் கப்பல்களைப் பற்றிச் சொல்கிறார்.

'மரத்தால் அவை கட்டப்பட்டிருந்தன.ஒவ்வொரு பாகமும் நல்ல முறையில் பலகைகள் பொருத்தப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருந்தன.காய்ந்த சுண்ணாம்பும் தாவர இழைகளும் கலந்த கலவையில் எதோ ஒரு மரத் திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டு உறுதியாக் கப்பட்ட பூச்சு கப்பலின் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருந்தது.'

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கப்பல்கள் அடுக்குகளாகக் கட்டப்பட்டன.கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தால் கூட பாதிப்பு எதுவுமின்றி தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் அது இருந்தது.

அந்தச் சமயத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை ஐரோப்பியர் கள் அறிந்திருக்கவில்லை.இதுவே மிக முன்னேறிய தற்காலத் தொழில் நுட்பத்துக்கு முன்னோடியாக அமைந்தது. தமிழர் கட்டுமரங்களின் இத்தகைய சிறப்புகளை ஐரோப்பியர் கள் அறிந்து கொண்டனர்.பிறகு அது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவியது

1877 ஆம் ஆண்டில் ' நத்தானியேல் ஹெர்ஷொப் ' [Nathaniel Hershoffe] என்ற அமெரிக்கர் தனது சொந்த கட்டுமர மாதிரியை உருவாக்கினார்.

காலம் செல்லச் செல்ல கட்டுமரத்திலிருந்து நீர் விளையாட்டுப் படகுகளும் உல்லாசக் கப்பல்களும்,சரக்குக் கப்பல்களும், நவீன போர்க் கப்பல்களும் உருவாகின

மனிதனின் நாடு பிடிக்கும் ஆர்வமும் பொருள் சேர்க்கும் ஆசையும் மேலும் மேலும் தேவைகளை அதிகரித்து அதன் மூலமாக படகுகளின் உருவமும் தொழில் நுட்பமும் விரைவாக மாறிக்கொண்டே சென்றது.அதிவேகமாக நிகழ்ந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணுசக்தி நீர்மூழ்கிகள் முதல் பிரமாண்ட சொகுசுக் கப்பல்கள் வரை உருவாக்க முடிந்தாலும் இது எல்லாவற்றுக்கும் தோணி மற்றும் கட்டுமரத் தொழில்நுட்பங்களே அடிப்படையாக அமைந்தன என்ற உண்மையை மறுக்க முடியாது.

தோணி மற்றும் கட்டுமரத்தின் கண்டுபிடிப்பு மனித நாகரிகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகப் பொருளாதார முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.மனித சமுதாயத்தின் இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதில் நாம் கொண்டுள்ள பங்குக்காக தமிழர்களாகிய நாமும் பெருமை கொள்ளலாம்.

தமிழர் வீரம் (ஆசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை, பி.ஏ.,பி.எல்.)

Picture

1. தமிழர் வீரம்
1. தமிழ்க் கொடி யேற்றம்
தமிழன் சீர்மை
தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. "மண்ணும் இமையமலை எங்கள் மலையே" என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். "கங்கையும் காவிரியும் எங்கள் நதியே" என்று இறுமாந்து பாடினான் தமிழன். "பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே" என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன்.

தமிழன் ஆண்மை 
ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாலாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மை யால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது. இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது.

தென்னாடு - தமிழ்நாடு 
உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற வாசகம். 

0 Comments:

Post a Comment

<< Home